புதுடெல்லி: அதானி குழுமத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த குழுமத்துக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பெர்கின் 106 பக்க அறிக்கையால் அதானி குழுமம் கடந்த ஆறு நாட்களில் மட்டும் ரூ.8.30 லட்சம் கோடியை இழந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் வேகமாக வீழச்சியை சந்தித்து வருகின்றன. இது, முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. இதையடுத்து, கடந்த ஆறு வர்த்தக தினங்களில் மட்டும் அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் சந்தைமதிப்பு 43 சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.
பங்குகளின் மதிப்பு சரிந்ததால்முதலீட்டாளர்களுக்கு 10,000 கோடி டாலர் அதாவது ரூ.8.30 லட்சம்கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அதானி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.10.9 லட்சம் கோடியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதானி குழுமம் தொடர் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு அதன் மூலம் ரூ.20,000 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் கடந்த வாரம் வெளியானது. இந்த தொடர் பங்கு வெளியீடு வெற்றிகரமாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை அதானி குழுமம் திடீரென ரத்து செய்வதாக அறிவித்தது. பங்குதாரர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அதானி குழுமம் அறிவித்தது.
அதானி குழுமத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் சூழ்நிலையில், அந்த குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை பிணையாக ஏற்க கிரெடிட்சூயிஸ் மறுத்துவிட்டதையடுத்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி அளவில் கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம் ஆகும். எஸ்பிஐ ரூ.21,000 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளன. இந்தஸ்இந்த் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் அதானி குழுமத்துக்கு அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன.
16-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி: போர்ப்ஸ் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருந்த அதானி, குழும நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியால் தற்போது 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 74.3 பில்லியன் டாலருடன் அவர் அந்த இடத்தில் உள்ளார். அவருக்கு பின்னால் இருந்த அம்பானி தற்போது 83 பில்லியன் டாலருடன் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago