உமாங்க் செயலி: நாளை இணைய மாநாடு

By செய்திப்பிரிவு

இரண்டாயிரத்துக்கும் அதிகமான சேவைகளை வழங்கி வரும் உமாங்க் செயலியின் மூன்றாவது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தலைமையில் இணைய மாநாடு நாளை நடைபெறுகிறது.

இந்த செயலியின் பங்குதாரர்களாக உள்ள சுமார் 20 துறைகளின் ஆலோசனைகள் மற்றும் பின்னூட்டங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நேரடி பலன் பரிவர்த்தனை துறைகள், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம், சுகாதாரம், கல்வி, வேளாண், கால்நடை பராமரிப்பு அமைச்சகங்கள், பணியாளர் தேர்வாணையம் ஆகியவை உமாங்கின் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.

இந்த மாநாட்டின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட், நெதர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கான உமாங்க் செயலியின் சர்வதேச பதிப்பு வெளியிடப்படும்.

அயல் நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள் ஆகியோர் இந்திய அரசின் சேவைகளை எந்நேரமும் பெற இந்த செயலி உதவிகரமாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE