முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 14.09 லட்சம் மெட்ரிக் டன்கள் தானியங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை

கரிப் பருவத்துக்கான கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது, முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விளைப்பொருட்களை அரசு கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் பருவம் சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கரிப் பருவத்துக்கான கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது.

முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விளைப்பொருட்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது.

மாநிலங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கரிப் பருவத்தின் போது 14.09 லட்சம் மெட்ரிக் டன்கள் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், பரிந்துரைகள் வரப்பெற்றவுடன், ஒரு வேளை சந்தை விலைகள் அவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், கரிப் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் படி செய்யப்படும்.

2020 செப்டம்பர் 29 வரை, தமிழ்நாட்டில் உள்ள 48 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், ரூ 33 லட்சம் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்புள்ள 46.35 மெட்ரிக் டன் பாசிப்பருப்பை தனது முதன்மை முகமைகளின் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ளது.

அதே போன்று, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 3961 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், ரூ 52.40 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்புள்ள 5089 மெட்ரிக் டன்கள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE