வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் 593 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 37,982 புள்ளிகளானது.
வங்கித் துறை, ஆட்டோமொபைல் பங்குகள் கணிசமாக உயர்ந்தது பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமானது.
தேசிய பங்குச் சந்தையில் 177 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 11,228 புள்ளிகளானது. மும்பை பங்குச் சந்தையில் இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவன பங்குகள் 8.24 சதவீதம் உயர்ந்தன.
ஹெச்யுஎல், நெஸ்லே ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டும் 0.61 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் வங்கிகள், ஆட்டோமொபைல் பங்குகள் 4.77 சதவீதம் உயர்ந்தன. ஆசிய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டதால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரையரங்குகள் அக்டோபர் மாதம் முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதும் பொருளாதாரம் ஏற்றம் பெறுவதற்கான அறிகுறிகளாக அமைந்துள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 18 காசுகள் சரிந்து 73.79 என்ற நிலையை எட்டியது.