அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக சமீர் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிஇஓ பொறுப்பில் இருக்கும் கிரிஷ் அய்யரின் பதவிக் காலம் வரும் மார்ச் 31- உடன் முடிய உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் சமீர் அகர்வால இந்தியப் பிரிவுக்கான சிஇஓ-வாக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிஷ் அய்யர் நிறுவனத்தின் ஆலோசகராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீர் அகர்வால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் துணை சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். தற்போது சிஇஓ பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார். லண்டன் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை பட்டம் பெற்ற சமீர் அகர்வால் 2018- ம் ஆண்டு வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை திட்ட மற்றும் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2018- டிசம்பரில் தலைமை வணிக அதிகாரியாக பொறுப்பேற்றார்.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததன்மூலம் இந்தியாவில் தனது வணிகத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் வால்மார்ட் செயல்பட்டுவருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையில் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது தொழில் நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ளது.