புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கை கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவை பல்கலைக்கழகக் கல்வியியல் புலம் மற்றும் தேசிய கல்வியியல் கழகம் இணைந்து ஆசிரியர்களுக்கான தொழில்முறை தரநிலை குறித்த கருத்தரங்கை இணையவழியில் நடத்தியது. இதில் விருந்தினராகக் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"மனிதனின் உடல், மனம், ஆன்மா அனைத்திலும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவதே கல்வி என்ற மகாத்மா காந்தியின் கருத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையை நமக்கு அளித்திருக்கிறார்.
புதிய கல்விக் கொள்கை, கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. மாணவர்களின் உலகியல் அறிவிற்கு முக்கியத்துவம் தரக்கூடிய, உலகத் தரத்திலான பல்நோக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்க புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருகிறது. பிரதமரின் திறன்மிக்க இந்தியா கொள்கையின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற தொழிற்கல்வி பள்ளி அளவிலேயே கற்றுக் கொடுக்கப்படும். கலை-அறிவியல் என்ற பாகுபாடு இருக்காது.
21-ம் நூற்றாண்டின் தேவைகளை நிறைவு செய்வதற்கான, 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான கொள்கை. கரோனா பெருந்தொற்று, கல்வித்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிற காலத்திலும் கல்வித்துறையை நவீன மயமாக்குவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. இன்று வகுப்பறை கல்வி முறையிலிருந்து இணையவழிக் கல்வி முறைக்கு நாம் மாறி இருக்கிறோம். அதற்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பன்முகத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்."
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago