மதுரையில் கரோனாவுக்கு பட்டாலியனை ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் எஸ்ஐ ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை போன்ற முன்களப் பணியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் லட்சுமி(45). இவர் மதுரை 6வது பட்டாலியன் பிரிவில் எஸ்ஐயாக பணிபுரிந்தார்.
இவரது கணவர் மதுரை வணிகவரித்துறையில் உயர்ப் பதவியில் உள்ளார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். மதுரை ஆத்திகுளம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவந்தனர்.
காவலராகப் பணியை தொடங்கிய லட்சுமி, 97ல் எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றவர். தேர்தலையொட்டி மாற்றுப் பணியாக விருதுநகருக்கு சென்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்துள்ளது.
இந்நிலையில், அவர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் ஆய்வில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணி அளவில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின், மதுரை தத்தனேரி மயானத்தில் அரசு வழிகாட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
6வது பட்டாயலின் எஸ்பி இளங்கோவன், உதவி தளவாய்கள், ஆய்வாளர்கள், எஸ் ஐக்கள் காவலர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையில் பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா, மதுரையைச் சேர்ந்த மூத்த பத்திரிகை புகைப்பட கலைஞர் நம்பிராஜன், செய்தியாளர் சரவணன் போன்றோர் அடுத்தடுத்து தொற்று பாதித்து உயிரிழந்தது போன்ற நிகழ்வு மதுரையில் காவல், சுகாதாரம், பத்திரிகைத்துறை போன்ற முன்களப் பணியாளர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.