நெருக்கடியில் மன உறுதியே மனிதனின் பலம்

By எல்.ரேணுகா தேவி

நமது புறச்சூழலே நம்மையும் நமது செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. அனுபவங்களும் அதன் வழியில் நாம் அடையும் பக்குவமுமே சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாளுவதற்கு உதவுகிறது. இதுவே நமக்கு மன திடத்தை வழங்குகிறது. புதிய சூழல்கள் சில நெருக்கடிகளைக் கொடுத்தாலும் மன உறுதியே அதை எதிர்கொள்ளும் வலுவைக் கொடுக்கிறது. நோய்கள், அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தவிர்க்கவியலாத மாற்றம் என்பன போன்றவற்றால் ஏற்படும் நெருக்கடிகளைத் தாங்கும் அளவுக்கான சக்தியே மன உறுதி.

மன உறுதியின் அவசியம்

கரோனா நோய்த் தொற்று நமக்குப் பழக்கமில்லாத புதிய சூழல்தான். நெருக்கடி நிறைந்த இந்தக் காலத்தை இவ்வளவு காலம் நாம் கடந்துள்ளோம். மேலும், சில காலம் இது நீடிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அதையும் அதைக் கடந்தும் மன உறுதியை வலுவாக வைத்துக்கொள்வதே இப்போதைய தேவை என்கின்றனர் மனநல வல்லுநர்கள்.

நெருக்கடியான காலங்களில் மன உறுதி குறையும்போது மனம் எதிர்மறைச் சிந்தனைக்குச் செல்வது இயல்பு. ஆனால், அதிலிருந்து விலக நேர்மறை சிந்தனைக்கு நம்மைக் கடத்துவது அவசியம். சுயபச்சாதாபத்தைக் கடந்த பொதுநல நோக்கும் உள்ளிழுத்து வெளியிடும் நிதானமான, ஆழமான சுவாசமும் நமக்கு அந்த மன உறுதியை வழங்கக் கூடும் என்கின்றனர்.

காலம் பல நெருக்கடிகளைக் கடந்தே பயணித்துள்ளது. நெருக்கடிகளின் தன்மை வேறுபடலாம். ஆனால், நெருக்கடிகள் இல்லாமல் இருந்ததில்லை. மனித சமூகம் அத்தகைய பல நெருக்கடிகளைக் கடந்தே வளர்ந்து வந்துள்ளது. இப்போதைய தேவை இன்றைய சிரமத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதுதான்.

எல்லா உயிரினங்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் இயற்கையான உந்துதல் சக்தியே மன உறுதியை மேலும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படை. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மனப்பான்மையைக் கடந்த கூட்டு பலம் என்பது போன்ற ஒரு கூட்டுச் சிந்தனையே உளரீதியான வலுவை வழங்குகிறது. முடங்கிப்போகாத சுறுசுறுப்பும், நிதானமாகச் சூழலைக் கையாளும் அறிவாற்றலும் இதன் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு உதவுகிறதாம்.

எப்படி எதிர்கொள்வது ?
பொதுவாக ஒரு நெருக்கடியான சூழல்தான் நம்மைப் பதற்றமடையச் செய்துவிடும் என்கிறோம். உண்மையில் மிகுந்த சந்தோஷமான விஷயமும் நம்மைப் பதற்றமடையச் செய்யும். மோசமான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எதுவானாலும் பதற்றத்தைக் கடந்த அமைதியான நிலையே நம்மை சிந்தித்துச் சிறப்பாகச் செயல்படவைக்கும். ‘பதறிய காரியம் சிதறும்’ என்கிற பழமொழியின் மாற்று வடிவம்தான் இது.

பதற்றமாக உணரும்போது நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். பதற்றமான நேரங்களில் இந்த மூச்சுப்பயிற்சி நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்துமென்றும், அந்த ஆசுவாசம் நமது பதற்றத்தைத் தணித்து நிதானமான சிந்தனைக்கு வழி செய்யும் என்றும் சொல்கின்றனர். எனக்கு, என் குடும்பத்துக்கு என்கிற நிலையைக் கடந்து ஒரு பொது சிந்தனை நமது பதற்றத்தைக் குறைக்கிறதாம்.

இந்த கரோனா காலத்தையே எடுத்துக்கொள்வோம். நாம் மட்டுமல்ல சமூகம் முழுமையும் நோய்த்தொற்றால் அவதிக்குள்ளாகியுள்ளது. நாம் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை நமக்கானது மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள அனைவரின் நலன் சார்ந்தது. இந்தப் பொது சிந்தனையே, சமூகம் முழுமையும் என்கிற கூட்டுணர்வைத் தருகிறது. அது நமது தனிப்பட்ட நலன் சார்ந்த பயத்தைக் கடந்து எல்லோருக்குமான நலனைச் சிந்திக்கச் செய்கிறது. அது நிலையின்மையின் ஆபத்தைப் பேசுவதைத் தவிர்த்து என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற வலுவை வழங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்