Published on : 18 Mar 2025 17:28 pm
தமிழக தொழிலதிபர் ஷிவ் நாடார் தன் வசம் இருந்த 51-ல் 47% பங்குகளை, ஒரே மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார்.
எச்சிஎல் குழுமத்தின் எச்சிஎல் டெக்னாலஜிஸ், எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 முக்கிய நிறுவனங்கள் ரோஷினி கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
இந்த பங்கு பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரராகவும் ரோஷினி உருவெடுத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.3.12 லட்சம் கோடி.
ரூ.7.66 லட்சம் கோடி சொத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரூ.5.99 லட்சம் கோடி சொத்துடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளார். இப்போது ரோஷினி 3-ம் இடம் பிடித்துள்ளார்.
ஷிவ் நாடார், கிரண் நாடார் தம்பதிக்கு 1982-ல் ஒரே மகளாக பிறந்த ரோஷினி, டெல்லியில் உள்ள வசந்த் வேலி பள்ளியில் தனது கல்விப் பயணத்தை தொடங்கினார்.
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.யில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் ஊடக துறையில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றிய ரோஷினி, எச்சிஎல் குழுமத்தில் இணைந்தார். 2020-ல் எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ஆனார்.
ரோஷினி தலைமையின் கீழ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கால் பதித்தது.
ரோஷினி ‘ஷிவ் நாடார் அறக்கட்டளை’ மூலம் சமூக சேவை செய்து வருகிறார். 2010-ல் ஷிகர் மல்ஹோத்ராவை திருமணம் செய்து கொண்டார். 2 மகன்கள் உள்ளனர்.
போர்ப்ஸ் இதழ் 2023-ல் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ரோஷினி 60-ம் இடம் பெற்றிருந்தார்.
தனது தந்தையின் பங்குகள் பரிமாற்றம் காரணமாக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரோஷினி 3-ம் இடம் பிடித்தாலும், அவரது செயல்பாடுகளே ஏற்றத்துக்கு வழிவகுத்தது.