Published on : 16 Jan 2025 18:34 pm
மதுரை அலங்காநல்லூரில் இன்று (ஜன.16) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
20 காளைகளை பிடித்த பூவந்தி அபிசித்தர் முதலிடம் பிடித்தார். 13 காளைகளை பிடித்த பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை பிடித்த மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை பிடித்த ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர்.
முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் ‘பாகுபலி’ பெற்றது. முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.
எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8.15 மணிக்கு தொடங்கி மாலை 6.15 மணிக்கு முடிந்தது. மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என 72 பேர் காயமடைந்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் பரிசு பெற்ற அபிசித்தர், கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்றார்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்திருந்தார்.
அவர்களை அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக, மாடுபிடி வீரர்கள் அமைச்சர், ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.