Published on : 16 Jan 2025 16:31 pm
ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘புதுமை’யான கதைக்களம் கொண்ட ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ப்ளஸ் மைனஸ் ரிவ்யூ இது.
ஆண் துணையின்றி குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பெண், மண வாழ்க்கையில் குழந்தை தேவையில்லை என நினைக்கும் ஆண், அவருக்கு நண்பராக பால் புதுமையினர்...
இப்படியாக, இன்றைய ‘இசட் ஜென்’ தலைமுறையினரிடையே துளிர்விடும் கலாச்சாரத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி கதைக் களமாக்கி இருப்பது துணிவான முயற்சி.
சிக்கலான கதைக் களம் என்றாலும் முடிந்தவரை சுவாரஸியமாகத் தர முயன்று, ஆனால், ஆங்காங்கே வெளிப்படும் ஆழமில்லாத காட்சிகளால் படம் தடுமாறுகிறது.
‘ஸ்பெர்ம் டோனர்’ மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண், தன் குழந்தைக்கு தந்தை யாராக இருக்கும் என நினைத்துக் குழம்புவதை யதார்த்தமாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
திருமணப் பந்தம், குழந்தை தேவையில்லை என்று நாயகன் சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. பிளே பாயாக மாறும் காட்சிகள் ஒட்டவில்லை.
படத்தில் ஒருவித அந்நியத்தன்மை தொற்றிக்கொள்வது ஈடுபாட்டை குறைக்கிறது. முதல் பாதிக்குப் பிறகு ஸ்பீடு பிரேக் போட்டது போல காட்சிகள் நகர்வது இன்னொரு குறை.
சிங்கிள் பேரன்டிங், பால் புதுமையினர் பேரன்டிங், விந்து தானம், தன்பாலின திருமணம் போன்ற விஷயங்களை துணிச்சலுடன் பேசியது தமிழ்ச் சூழலில் நல்ல முன்முயற்சி.
நாயகனாக ரவி மோகனும் கச்சிதமாக நடித்துள்ளார். அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் நித்யா மேனன், பால் புதுமையினராக வினய் ராய் துணிந்து நடித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கெனவே சில பாடல்கள் ஹிட். பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு கை கொடுத்திருக்கிறது.
கதைக்களம் புதிது என்றாலும், உணர்வுபூர்வ காட்சிகள், சுவாரஸ்ய திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் ‘காதலிக்க நேரமில்லை’ நிச்சயம் வேற லெவல் சென்றிருக்கும்.