Published on : 14 Nov 2023 20:39 pm
சென்னையில் செவ்வாய்க்கிழமை கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘தென்கிழக்கு வங்கக் கடலில், செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நிலவக்கூடும்.
இது, தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாக வரும் 16-ம் தேதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும்.
மேலும், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மற்றுமொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கனமழையும், 31 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, செவ்வாய்க்கிழமை காலை முதலே மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடாது மழை பெய்து வந்தது. வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியைவிட தாம்பரம், ஓஎம்ஆர் பகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.
கிண்டி, வடபழனி, கோயம்பேடு, பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காலை தொடங்கிய மழை விடாது பெய்து வந்தது. புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடாது தொடர்மழை பெய்தது.
சென்னையில் புதன்கிழமையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை நிவாரண முகாம்களில் யாரும் தங்கவைக்கப்படவில்லை. ஒருவேளை அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
“அடுத்த 24 மணி நேரத்துக்கு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தமிழக கடற்கரை பகுதிகளிலும், புதன்கிழமை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், ஆந்திர கடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை, பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அக்டோபர் 1ம் தேதி முதல் இன்றுவரை பதிவான மழையின் அளவு 23 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 27 செ.மீ. இது இயல்பைவிட 14 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று (நவ.14) காலை 8.30 மணி வரை 35 மாவட்டங்களில் 13.25 மி.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 5 இடங்களில் மிக கனமழையும், 30 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 13.11.2023-ம் நாளிட்ட அறிவிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் 13.11.2023 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன. பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன.
பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. TNSMART செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் 200 நபர்கள் அரக்கோணம் மற்றும் சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.
பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும்; மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார்.
அப்போது, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட அவர், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான எச்சரிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் அந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன. மேலும் பொதுமக்கள், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
படங்கள்: ம.பிரபு, பி.ஜோதி ராமலிங்கம், எஸ்.ஆர்.ரகுநாதன், எம்.வேதன், அகிலா ஈஸ்வரன்