

''பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது. மதிப்பெண்கள் மட்டுமே வெளியாகும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் இதே முறை கடைபிடிக்கப்படும். குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்படுகிறது. ரேங்க் முறை ஒழிக்கப்படுவதால் சில மதிப்பெண்களில் முதலிடத்தையோ அல்லது முன்னணி இடத்தையோ தவற விட்ட மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் நிலை இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா?
மாணவர்கள் இடையே உள்ள போட்டி மனப்பான்மை குறையுமா? அல்லது உத்வேகம் குறையுமா? அதிகமாகுமா? கல்வித் தரம் உயருமா? அல்லது குறையுமா?
மதிப்பெண் மட்டுமே இலக்கு என பிள்ளைகளை விரட்டும் பெற்றோர்கள் இனி அவர்கள் குழந்தைகளின் இதர திறன்களையும் வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவார்களா?
தனியார் பள்ளிகள் எங்கள் மாணவர்தான் மாநில அளவில் முதலிடம், 100க்கு 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற கவர்ச்சி விளம்பரங்கள் செய்வது நிறுத்தப்படுமா?
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
வாருங்கள் விவாதிப்போம் - உங்கள் பார்வையை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதியுங்கள்.