தனிஷ்க் நிறுவனம் சார்பில் ‘புதுமைப் பெண்' விருது : கோவை மண்டலத்தில் 16 பெண்களுக்கு வழங்கப்பட்டது

தனிஷ்க் நிறுவனம் சார்பில் கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் `புதுமைப் பெண்' விருது பெற்ற பெண்கள். படம்: ஜெ.மனோகரன்
தனிஷ்க் நிறுவனம் சார்பில் கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் `புதுமைப் பெண்' விருது பெற்ற பெண்கள். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க்நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ளபுதுமைப் பெண்களை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டலத்தில் சாதித்துவரும் பெண்களை அடையாளம்கண்டு, அவர்களுக்கு புதுமைப் பெண் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில்,தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் ராதா ரமணி பேசும்போது, “பெண்களுக்கு பல்வேறு விதமான கடமைகள் உள்ளன. இருப்பினும், தன்னையும், குடும்பத்தையும் தாண்டி மற்றவர்களுக்காக சிலர் பாடுபட்டுள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது" என்றார்.

பாரதியார் பல்கலைக்கழக மேலாண்மை, தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் ரூபாகுணசீலன் பேசும்போது, "பெண்களுக்கு வேலையும் முக்கியம், குடும்பமும் முக்கியம். இவற்றுக்கு மத்தியில் சமுதாயத்துக்கு ஆற்றும் பணியும் முக்கியம் என்று கருதும் சாதனைப் பெண்களுக்கு தனிஷ்க் நிறுவனம் விருது வழங்குவது பாராட்டுக்குரியது" என்றார்.

இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன் பேசும்போது, "சாதனை படைக்கவே பிறந்தவர்கள் பெண்கள். அப்படி சாதித்த புதுமைப் பெண்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் தனிஷ்க் நிறுவனத்துக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

தனிஷ்க் தலைமை செயல் அதிகாரி அஜய் சாவ்லா பேசும்போது, “தன்னலமில்லாமல், தாங்கள் செய்யும் பணியை செவ்வனே செய்துவரும் இந்த புதுமைப் பெண்களின் ஒவ்வொரு கதையும் நமக்கு ஊக்கமளிப்பவை" என்றார்.

இந்த நிகழ்வில், தனிஷ்க் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ரஞ்சனி கிருஷ்ணசாமி, டைட்டன் ரீஜனல் பிசினஸ் ஹெட் சரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in