

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் திருவையாறு–தஞ்சாவூர் சாலையில் கண்டியூரில் உள்ளது. இந்நிலத்தை பயன்பாட்டில் வைத்திருந்த குத்தகைதாரர், கோயிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை செலுத்தாததால், கோயில் நிர்வாகம் சார்பில், தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்றம் கோயில் நிலத்தை மீட்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின்படி நேற்று வருவாய் நீதிமன்ற அமலாக்க தனி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் முன்னிலையில் ரூ.2 கோடி மதிப்பிலான நன்செய் நிலம் மீட்கப்பட்டு, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, நில அளவையர் கஸ்தூரி, கோயில் செயல் அலுவலர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.