டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் : ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் :  ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியூ) மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

திருவாடானை அருகே தாமோதரன்பட்டிணம் மீனவ கிராமத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதை அருகில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதை மாற்ற கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக திருவாடானை வட்டாட்சியர் செப்.10-ம் தேதி நடத்திய சமாதானக் கூட்டத்தில், மதுக் கடை உடனே அகற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இக்கடை இதுவரை அகற்றப்படவில்லை.

டாஸ்மாக் கடையை அகற்ற மேலும் தாமதம் செய்தால் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைவில் குடும்பத்துடன் நடைபயணமாக சென்று காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in