நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற அளவீடு செய்யும் பணி தீவிரம் :

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற அளவீடு செய்யும் பணி தீவிரம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரியிலுள்ள கட்டிக்கானப்பள்ளி கரீம் சாகிப் ஏரி, தேவசமுத்திரம் ஏரி மற்றும் அவதானப் பட்டி ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகாரணமாக, உபரிநீர் குடியிருப்புகளில் புகுந்தது. இதற்கு நிரந்தரதீர்வு காணும் வகையில், நீர்நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்டஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நீர்நிலைகளை அளவீடு செய்தனர். அவதானப்பட்டி ஏரியில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துகட்டப்பட்டுள்ள வீடுகள், விளைநிலங்களை கணக்கீடு செய்து குறியீடுகள் வரையப்பட்டன.

இதேபோல், தேவசமுத்திரம் ஏரிபகுதியில் நீர்வரத்துத் கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளையும், தனியார் பள்ளி யையொட்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய்கள் அளவீடு செய்யப்பட்டன.

மேலும், கட்டிகானப்பள்ளி கரீம் சாகிப் ஏரி, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன ஏரியிலிருந்து கட்டிக்கானப்பள்ளி ஏரிக்கு நீர் வரும் கால்வாய்கள் மற்றும் ஏரிப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளதையும் அலுவலர்கள் அளவீடு செய்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனேஅகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) குமார், உதவிசெயற்பொறியாளர்கள் காளிபிரியன், கிருபா, வட்டாட்சியர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in