மர்மநபர்களின் புகலிடமான அரசு தொடக்கப்பள்ளி : நுழைவு வாயிலை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

மர்மநபர்களின் புகலிடமான அரசு தொடக்கப்பள்ளி :  நுழைவு வாயிலை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை
Updated on
1 min read

உதகை அருகே தும்மனட்டி ஊராட்சிக்குஉட்பட்டது கனாகொம்பை. இங்கு வசிக்கும் மக்களின் குழந்தைகளுக்காக தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள சிலர், அரசுப் பள்ளியை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பெற்றோர்கூறியதாவது: கனாகொம்பை அரசுப்பள்ளி ஆங்கில வழிப்பள்ளியாக மாற்றப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிக்கு, சுற்றுச்சுவரும், நுழைவு வாயிலும் கட்டப்பட்டது.

பள்ளி நிறைவடைந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும், இப்பகுதியைசேர்ந்த சிலர் சமூக விரோத செயல்களுக்குஇப்பள்ளியை பயன்படுத்திவருகின்றனர். நுழைவு வாயிலைசேதப்படுத்திய மர்மநபர்கள், பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து அங்குள்ள புல்தரையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

அங்கேயே மது பாட்டில்களை வீசிச்செல்கின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. எனினும், இச்சம்பவம் தொடர் கதையாகவே உள்ளது. எனவே, நுழைவு வாயிலை சீரமைத்து, பள்ளிக்குள் யாரும்நுழையாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்குள் மர்மநபர்கள் நுழைவது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in