

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 13-ம் தேதி அணை நீர் மட்டம் 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர்இருப்பு 93.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.