குரூப் 4 தேர்வு முறைகேட்டில் - டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தொடர்பில்லை : உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் -  டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தொடர்பில்லை :  உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
Updated on
1 min read

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஷ்வி என்பவர் 1.9.2019-ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி டிஎஸ்பி புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: குரூப் 4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். 98 விண்ணப்பதாரர், 2 டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், விடைத்தாள்களை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுநர் என 118 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கும் தொடர்புஇல்லை. இருப்பினும் பணியில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீஸார் 191 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், மொபைல் போன், லேப்டாப் ஆகியவை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்ததும் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in