

உடுமலையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உடுமலை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வதீபா கூறியதாவது:
போக்குவரத்துதுறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உடுமலையில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கூடுதல் கட்டணம் வசூல், அடிப்படை வசதிகள் இல்லாதது, முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விதி மீறல்களுக்காக 5 பேருந்துகளுக்கு மொத்தம் ரூ.12,500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்சூரன்ஸ், எப்.சி இல்லாமல் இயக்கப்பட்ட பேருந்து உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.