

தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழும சமூக நல உறுப்பினர்கள் நியமனத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2015-ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்துக்கு 1 பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மேற்பட்ட 65 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் 2 முறை மட்டுமே பதவி வகிக்கத் தகுதியானவர். அதே நேரம், தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க முடியாது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தகுதியானவர்கள் வரும் 22-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை, ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆட்சியரகம், தருமபுரி’ என்ற முகவரியில் சேர்த்திட வேண்டும்.