சிவசைலத்தில் மறு தேர்தல் நடந்த3-வது வார்டில் 80.79 சதவீத வாக்குப்பதிவு :

சிவசைலத்தில் மறு தேர்தல் நடந்த3-வது வார்டில் 80.79 சதவீத வாக்குப்பதிவு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டதில் கடந்த 6-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்த கடையம் ஒன்றியம் சிவசைலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த 130-வது எண் வாக்குச்சாவடி 2, 3 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியது ஆகும்.

இந்த ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் இதுதெரியாமல் 2-வது வார்டு வாக்காளர்களுக்கும் ஊராட்சி வார்டு உறுப் பினரை தேர்வு செய்வதற்கான வாக்குச்சீட்டுகளை கொடுத்துள்ளனர்.

இதனால் 2-வது வார்டைச் சேர்ந்த 45 வாக்காளர்கள் 3-வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலுக்கு வாக்களித்து விட்டனர். இந்த குளறுபடி தெரியவந்ததையடுத்து 3-வது வார்டுஉறுப்பினர் பதவிக்கு மட்டும்நேற்று மறு தேர்தல் நடைபெற்றது.

இந்த வார்டில் 96 ஆண்கள், 107 பெண்கள் என மொத்தம் 203வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 71 ஆண்கள், 93 பெண்கள் என மொத்தம் 164 பேர் வாக்களித்தனர். இது 80.79 சதவீத வாக்குப்பதிவு ஆகும். முதல்கட்ட தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களிலும் 73.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. சிவசைலம் 3-வது வார்டில் நடந்த மறு தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in