கரூர் மாவட்டத்தில் 100% இலக்கை எட்ட - தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு பரிசுகள் அறிவிப்பு :

கரூர் மாவட்டத்தில் 100% இலக்கை எட்ட -  தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு பரிசுகள் அறிவிப்பு :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் அக்.10-ம் தேதி நடத்தப்படவுள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியது: கரூர் மாவட்டம் முழுவதும் அக்.10-ம் தேதி நடைபெறும் 5-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும். இதற்காக, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் எண் போன்ற விவரங்களை கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரிக்க வேண்டும்.

முகாமுக்கு அழைத்து வரும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், அன்றைய முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில், மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக கிரைண்டர், 3-ம் பரிசாக மிக்ஸி, 4-ம் பரிசாக 25 பேருக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு பாத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. 25-க்கும் மேற்பட்ட நபர்களை முகாமுக்கு அழைத்து வருபவர்களின் பெயர்களும் குலுக்கலில் சேர்க்கப்படும். 5-ம் கட்ட முகாமின் மூலம் கரூர் மாவட்டம் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், சிறப்பு வருவாய் அலுவலர்(நிலமெடுப்பு) கவிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சைபுதீன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம்நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கூட்ட அரங்கிலும், மற்ற அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in