காதல் மனைவியை கொலை செய்த வழக்கில் - இசைப்பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை :

காதல் மனைவியை கொலை செய்த வழக்கில் -  இசைப்பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் காதல் மனைவியை கொலை செய்த வழக்கில், இசைப்பள்ளி ஆசிரியருக்கு ஆயுள்தண்டனை விதித்து, தூத்துக்குடிமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன்ஜூலி பாரத் (41). இவர், நெல்லையில் உள்ள ஒரு இசைப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆசிரியை அருணாதேவியை (27), கடந்த 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் விளாத்திகுளத்தில் உள்ள அருணாதேவியின் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு ஜெயபிரகாஷ் என்ற மகன் உள்ளார்.

ஜூலி பாரத் தனது மனைவியை தனிக்குடித்தனத்துக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் ஏற்க மறுத்தார்.கடந்த 7.11.2015-ல் இவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறின்போது, கத்தியால் குத்தி அருணாதேவி கொலை செய்யப்பட்டார்.

ஜூலி பாரத்தை விளாத்திகுளம் போலீஸார் கைது செய்து, அவர்மீது, தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஜூலி பாரத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, நீதிபதி பாண்டியராஜன் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபாஷிணி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in