ஈரோடு மாநகரில் கடந்த மாதத்தில் சாலை விதி மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு :

ஈரோடு மாநகரில் கடந்த மாதத்தில்  சாலை விதி மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு :
Updated on
1 min read

ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, கடந்த மாதத்தில் 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

பல இடங்களில் போக்கு வரத்து விதிமுறை மீறல்களால், விபத்து மற்றும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகனச்சோதனை மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நகரப்பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர் களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் 200 முதல் 250 பேர் ஹெல்மெட் அணியாமல் வருவதாக போக்குவரத்து போலீஸாரால் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர செல்போன் பேசியபடி வருவது, இருசக்கர வாகனங்களில் 3 பேர் அமர்ந்து வருவது, முறையான ஆவணங்கள் இல்லாமல் வருவது போன்றவற்றுக்காகவும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 123 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றதாக 1,926 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 1, 626 என 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 2, 500 அபராதம் வசூல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in