காவல் நிலையங்களில் மட்டுமின்றி - ரோந்து காவலர்களிடமும்மக்கள் புகார் அளிக்கலாம் : மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தகவல்

காவல் நிலையங்களில் மட்டுமின்றி -  ரோந்து காவலர்களிடமும்மக்கள் புகார் அளிக்கலாம் :  மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

திருச்சி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் ரோந்து காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட எஸ்.பி பா.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் 36 காவலர்களுக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட ரோந்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்துக்கு 36 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீப காலங்களில் நடைபெற்ற குற்றங்களின் அடிப்படையில், எந்தப் பகுதியில் ரோந்து அதிகமாக இருக்க வேண்டும் எனக் கண்டறிந்து அப்பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகளவில் இருக்கும். ரோந்து செல்லும் காவலர்களிடமும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இதுகுறித்து ரோந்து போலீஸார், உடனடியாக காவல்நிலைய அதிகாரிக்கு தெரியப்படுத்தி, அந்த மனுமீது விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் இருசக்கர வாகன ரோந்து பணியை திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நேற்று தொடங்கிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in