கலசப்பாக்கம் அருகே தரமற்ற முறையில் பள்ளி கட்டிடம் கட்டிய - ஒப்பந்ததாரர், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உறுதி

காந்தபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஆய்வு செய்த தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்.
காந்தபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஆய்வு செய்த தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்.
Updated on
1 min read

கலசப்பாக்கம் அடுத்த காந்த பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிக்க தவறிய பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித் துள்ளார்.

தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த காந்தபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 534 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளியில், ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடியில் ஆய்வகம், நூலகம், கணினி அறை மற்றும் வகுப்பறைகள் என இரண்டு அடுக்குகளாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா ஊரடங்குக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டுள்ளதால், மாண வர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்போது அவர்கள், பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ள தாகவும், சுவர்கள் மற்றும் தரைகள் பலத்த சேதமடைந்து இருப்பதாக, பெற்றோருக்கு தகவல் தெரிவித் தனர். இதையடுத்து அரசு உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர் பார்த்தபோது, பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை இல்லாததும், மாணவர்களின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதும் தெரியவந்தது. இதனால், பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, காந்த பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பள்ளி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல், நடைபாதை மற்றும் தரைதளம் உடைந்து பெயர்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் மழுப்பலாக பதில் அளித்தனர். இதனால், அவர்களை ஆட்சியர் எச்சரித்தார். மேலும் அவர், “கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, பலவீனம் அடைந்துள்ள சுவர்களை அகற்றிவிட்டு, புதிய சுவர்களை அமைத்து, பாதுகாப்பான பள்ளி கட்டிடமாக மாற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, “கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, உடனடியாக மறுசீரமைப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக் கப்படும். கட்டுமானப் பணி நடைபெற்றபோது, பணியில் இருந்த பொதுப்பணித்துறை பொறியாளர் உள்ளிட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். போர்க்கால அடிப் படையில், கட்டிடத்தை மறு சீரமைப்பு செய்த பிறகு, மாண வர்கள் கல்வி கற்க, பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in