ஈரோடு சிவகிரி அரசுப் பள்ளியில் - 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று :

ஈரோடு சிவகிரி அரசுப் பள்ளியில் -  4 மாணவர்களுக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 395 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 900 மாணவ, மாணவியர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 21-ம் தேதி சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 95 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 3 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் அவர்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணியில் சிவகிரி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in