இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல் : தூத்துக்குடியில் ஒருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல் :  தூத்துக்குடியில் ஒருவர் கைது
Updated on
1 min read

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் எடையுள்ள மஞ்சளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் சமையலுக்கு பயன்படுத்தும் விரலி மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழக கடற்கரை பகுதி வழியாகஇலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவுபோலீஸார் மாவட்டத்தில் கடற்கரைபகுதியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கியூ பிரிவுஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பெஞ்சமின் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத பைபர் படகு ஒன்றில் ஒரு நபர் சாக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார். போலீஸார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து, சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அவற்றில் விரலி மஞ்சள் இருந்தன. 50 சாக்கு மூட்டைகளில் தலா 40 கிலோ வீதம் மொத்தம் 2 டன் விரலி மஞ்சள் இருந்தது.

விரலி மஞ்சள் மற்றும் பைபர் படகை பறிமுதல் செய்த போலீஸார், தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஆர்.முகம்மது (29) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in