பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு - ஆட்சியர், எஸ்பி அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு :

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு -  ஆட்சியர், எஸ்பி அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு :
Updated on
1 min read

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி தலைமையில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தந்தை பெரியார் பிறந்த நாளானசெப்டம்பர் 17-ம் தேதி ஆண்டு தோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெரியார் பிறந்த நாளான நேற்று சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் அலுவலர்கள் ஊழியர்கள், சமூக நீதி நாள்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலையில் காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், அலுவலக பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி ஜி.சந்தீஸ், டிஎஸ்பி ஜெயராம், ஆய்வாளர்கள் சிவசங்கரன், பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in