

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை கவுரவிக்கும் வகையில் சேலம் மேற்கு கோட்ட அஞ்சல்துறை சார்பில், ‘மை ஸ்டாம்ப்’ வெளியிடப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், 2016-ல்பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.
தொடர்ந்து, 2-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தமக்களிடமிருந்து வாழ்த்து தெரிவித்து இ-போஸ்ட் வந்திருந்தது.
இந்நிலையில், சேலம் மேற்கு கோட்ட அஞ்சல்துறை சார்பில், மாரியப்பனை கவுரவிக்கும் வகையில், அவரது படம் பொறித்த ‘மை ஸ்டாம்ப்’ வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சேலம் மேற்குஅஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உதவி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அஞ்சல்துறை அலுவலர் செங்கோட்டுவேல் உள்ளிட்டோர், பெரியவடகம்பட்டியில் உள்ள மாரியப்பனை சந்தித்து, 510 இ-போஸ்ட்கள் மற்றும் மாரியப்பன் படத்துடன் கூடிய ‘மை ஸ்டாம்ப்’ ஆகியவற்றை அவரிடம் வழங்கி வாழ்த்தினர்.