தூத்துக்குடி மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது : கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் 11 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை கனிமொழி எம்.பி. வழங்கினார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் 11 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை கனிமொழி எம்.பி. வழங்கினார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 11 ஆசிரிய, ஆசிரியைகள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்க த்தில் நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு விருதுகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

மேலும், மாவட்ட வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர், இளநிலை வருவாய் அலுவலர் 7 பேருக்கும், ஊரக வளர்ச்சி துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் 5 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மூலம் கேரள மாநிலம் பொட்டிமுடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயம் அடைந்த நபர்கள் 3 பேருக்கு ரூ.14 லட்சம் நிவாரண உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 10 பேருக்கு ஜவுளி வியாபாரம், தையல் இயந்திரம், ஆடு வளர்ப்பு ஆகிய தொழில் தொடங்க தலா ரூ.10 ஆயிரம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 10 பேருக்கு பெட்டிக்கடை, அரிசி மாவு வியாபாரம், ஜவுளி வியாபாரம், தையல் இயந்திரம், இட்லி கடை, தேனீர் கடை ஆகிய தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சாரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in