

‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விருப்பமுள்ளவர்கள் வரும் அக்., 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்,’ என சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்திட ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ கடந்த 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்.
2021-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அது தொடர்பான சாதனைகள், தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இருக்க வேண்டும்.
விருதுக்கான விண்ணப்பங்கள் வரும் 31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 110–ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (0427 2451333) மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.