லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ரூ.1.66 லட்சம் பறிமுதல் - பெரம்பலூர் ஆர்டிஓ உட்பட 10 பேர் மீது வழக்கு :

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ரூ.1.66 லட்சம் பறிமுதல் -  பெரம்பலூர் ஆர்டிஓ உட்பட 10 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1.66 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரத்னவள்ளி, சுலோச்சனா ஆகியோர் அடங்கிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் அறையின் அருகே உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து ரூ.41,500, தற்காலிக பணியாளர் சேகரிடமிருந்து ரூ.11 ஆயிரம், மற்றொரு தற்காலிக பணியாளர் கண்ணுசாமியிடமிருந்து ரூ.13 ஆயிரம், இடைத்தரகர்கள் 7 பேரிடமிருந்து ரூ.1,00,450 என கணக்கில் வராத பணம் ரூ.1,65,950-ஐ பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பழனிசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் நேற்று அதிகாலை 3.45 மணி வரை விசாரணை நடத்தினர். அதன்பின், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார், தற்காலிக பணியாளர்கள் சேகர், கண்ணுசாமி, இடைத்தரகர்கள் சேகர், முகிலன், பாலகிருஷ்ணன், வேல்முருகன், மதியழகன், சுந்தரராஜ் என மொத்தம் 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in