குவைத்தில் வேலைக்கு சென்ற தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை : மீட்கக் கோரி 14 வயது சிறுமி ஆட்சியரிடம் மனு

குவைத்தில் வேலைக்கு சென்ற தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை :  மீட்கக் கோரி 14 வயது சிறுமி ஆட்சியரிடம் மனு
Updated on
1 min read

குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற தனது தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவரை மீட்க வலியுறுத்தியும் 14 வயது சிறுமி தனது பாட்டியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

காரைக்குடி அருகே வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இவரது மனைவி சித்ரா (46), மகள் கீர்த்தனா (14) இருவரும் வறுமையில் சிரமப்பட்டனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனாவை தனது தாயார் அழகம்மாளிடம் (80) விட்டுவிட்டு உறவினர் உதவியுடன் சித்ரா குவைத் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்றார்.

அங்கிருந்து அவ்வப்போது வீட்டுக்கு பணம் அனுப்பி வந்தார். ஆனால் சில மாதங்களாக வீட்டின் உரிமையாளர் சித்ராவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வருகிறாராம்.

மேலும் தனது மகளிடம் பேசவிடாமல் தடுத்து வருகிறாராம். இதுகுறித்து சித்ராவோடு பணிபுரியும் ஊழியர் ஒருவர், கீர்த்தனாவின் மொபைலில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தனது தாயாரை மீட்டு ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கக் கோரி, கீர்த்தனா தனது பாட்டியுடன் வந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in