ஒகேனக்கல் காவிரியாற்றில் 30 ஆயிரம்கனஅடியாக தொடரும் நீர்வரத்து :
ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன் தினம் காலை நிலவரப்படி விநாடிக்கு 28 ஆயிரம் கன அளவுக்கு வந்து கொண்டி ருந்தது. அன்று மாலை நிலவரப்படி நீர்வரத்து அளவு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியது. பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் அதிக ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் ஓடத் தொடங்கியது. நேற்றும் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி அளவிலேயே நீர்வரத்து தொடர்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றோரப் பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. இதுதவிர, கரோனா ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட தடையும் ஒகேனக்கல்லில் தொடர்ந்து அமலில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கிடையில், ஊரடங்கு தடை, வெள்ளப்பெருக்கு ஆகியவை பற்றி அறியாமல் ஒகேனக்கல் வரும் சில சுற்றுலா பயணிகள் தூரத்தில் இருந்தபடி காவிரியாற்றை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.
