கடலூரில் தவாக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு :

கடலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சுரேஷ் வீட்டை போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சுரேஷ் வீட்டை போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Updated on
1 min read

கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

கடலூர் செந்தாமரைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நகர தொழிற் சங்க தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் சுரேஷின் வீட்டில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு சுரேஷ் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கம் உள்ளவர்களும் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருந்தது.

மர்ம நபர்கள் சிலர் சுரேஷின் வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி அது வெடித்து சிதறியதால் பலத்த சத்தம் கேட்டுள்ளது என்று தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் சுரேஷின் வீட்டு முன்பு திரண்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். சுரேஷ் வீட்டுக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in