முதல்போக பாசனத்துக்கு - கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : 9012 ஏக்கர் நிலப்பரப்பு பயனடையும்

கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரில் மலர் தூவி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி உள்ளிட்டோர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரில் மலர் தூவி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப் பட்டது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக வலது, இடது பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவுப்படி நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். பர்கூர் சட்டப் பேரவை உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

கால்வாய்களில் பாய்ந்தோடிய தண்ணீருக்கு ஆட்சியர் உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் ஆட்சியர் பேசியது:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளது. தொடர்ந்து 120 நாட்களுக்கு அதாவது 22.11.2021 வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அணையின் தற்போதைய நீர் நிலவரம், அணைக்கு வரும் நீரின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு வலது கால்வாயில் விநாடிக்கு 87 கன அடியும், இடது கால்வாயில் 93 கன அடியும் என விநாடிக்கு 180 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி வட்டத்தில் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீரை விவசாயிகள் மிக சிக்கனமாக வேளாண் தேவைகளுக்கு பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும். இப்பணிகள் தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மணிமேகலை, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் சையத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in