

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
விழாவின் முதல் நாளான நேற்று காலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடைபெற்றன. தொடர்ந்து கொடிப்பட்டம் வலம் வந்தது. 7.30 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் திருவிழா கொடியேற்றினார். அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி வலம் வந்தார். பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடைபெற்றது.
இத்திருவிழா ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் தினசரி மாலையில் பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருள்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழா காலங்களில் தினசரி மூன்று நேரமும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்துள்ளனர்.