பவானியில் சிறுமிக்கு திருமணம் போக்சோ சட்டத்தில் 6 பேர் கைது :

பவானியில் சிறுமிக்கு திருமணம்  போக்சோ சட்டத்தில் 6 பேர் கைது :
Updated on
1 min read

பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்திய வழக்கில், பெற்றோர் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் பன்னிமடைக்குடியைச் சேர்ந்த அஜீத் (21) என்பவர், ஒரு பெண்ணுடன் ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். தாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண் 18 வயது நிறைவடையாதவர் என்பது தெரியவந்தது.

பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அந்தப் பெண்ணிற்கு ஆறு மாதம் முன்பே வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி அறிவுறுத்தலின் பேரில் அலுவலர் ராஜேந்திரன் பவானி காவல்துறையில் புகார் அளித்தார். 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியின் பெற்றோர் அப்புசாமி, நாகமணி, திருமணம் செய்த காமராஜ் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in