விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வட மாநில இளைஞர் உயிரிழப்பு :

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வட மாநில இளைஞர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருட முயன்றதாக பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே வேட்டைக்காரன் குட்டை பகுதியில், ஒரு வீட்டில் திருட முயன்றதாக இளைஞர் ஒருவரை நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து, கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று அதிகாலை போலீஸார் அங்கு சென்று இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் அருகேயுள்ள மால்காரா கிராமத்தைச் சேர்ந்த சட்டெ இந்திர பிரசாத்(35) என்று தெரியவந்தது. அப்போது திடீரென சட்டெ இந்திரபிரசாத் மயங்கி விழுந்தார். இதையடுத்து, காவலர்கள் அவரை சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை நடத்தியபோது, வரும் வழியிலேயே சட்டெ இந்திரபிரசாத் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணைநடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சூலூர் காவல் ஆய்வாளருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in