சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூரில் உண்ணாவிரதம், சாலை மறியல் :

கடலூர் மஞ்சக்குப்பம் நகராட்சி பூங்கா அருகே மீனவப் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் நகராட்சி பூங்கா அருகே மீனவப் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரி கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவப் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் தேவனாம் பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமங்களில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகமும் தடை விதித்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடந்த 17-ம் தேதி கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி தேவனாம்பட்டினத்தில் நேற்று அப்பகுதி மீனவர்கள் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினம் மீனவ பெண்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் 1 மணியளவில் இக் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் மஞ்சக்குப்பம் நகராட்சி பூங்கா அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு 7 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போக்குவரத்து மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி கடலூர் அருகே உள்ள ராசாப்பேட்டையில் சுமார் 150 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in