திருப்பத்தூர் மாவட்டத்தில் - விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும் : ஆட்சியரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்த விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்த விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் உதயகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம் மனுவில் அவர்கள் கூறி யிருப்பதாவது, "தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மக்கள் குறைதீர்வுக்கூட்டம், விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு குறைதீர்வு கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், தற்போது கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டத்தை வரும் வாரத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தோல் தொழிற்சாலை நிறுவனங்கள் தோல் கழிவுகளை பாலாற்றில் கலந்து விடுகின்றனர். இதனால், நீர் மாசடைந்துள்ளது. தோல் கழிவு கலந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது என்பதால் இது போன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் இயற்கை விவ சாயத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகின்றனர். ஆனால், இதை ஊக்குவிக்க வேண்டிய வேளாண் துறை ரசாயனம் கலந்து உரங்களை வாங்க வேண்டும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகின்றனர். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை வேளாண் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய கடன் பெற வங்கிகளில் எளிய நடைமுறைகளை அமல்படுத்த கூட்டுறவு கடன் சங்கங் களுக்கு உத்தரவிட வேண்டும்.

பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், பாலாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in