தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு - கோவை உட்பட 4 மாவட்டங்களில் : 20 ஆயிரம் மரக்கன்று நட்ட விவசாயிகள் :

தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு -  கோவை உட்பட 4 மாவட்டங்களில் : 20 ஆயிரம் மரக்கன்று நட்ட விவசாயிகள் :
Updated on
1 min read

தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு கோவை உட்பட 4 மாவட்டங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ (வன திருவிழா) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும், கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடந்தது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் 18 ஏக்கரில் 4,150 மரக்கன்றுகளும், திருப்பூரில் 26 ஏக்கரில் 4,550 மரக்கன்றுகளும், நாமக்கல்லில் 31.5 ஏக்கரில் 7,290 மரக்கன்றுகளும், கரூரில் 18 ஏக்கரில் 4,400 மரக்கன்றுகளும் விவசாயிகளால் நடப்பட்டன. தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரக்கன்றுகள் நடப்பட்டன.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர். சத்குருவால் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர். மேலும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் லாபகரமான வேளாண் காடு வளர்ப்பு முறையை எப்படி உருவாக்குவது என்பது குறித்த சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வன கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் டீன் பார்த்திபன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை பேராசிரியர் கே.எம்.சிவக்குமார், சுரேஷ் கண்ணன், ஹரீஷ் பாபு மற்றும் முன்னோடி விவசாயிகள் செந்தில் குமார், அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in