

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத் தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம், ‘ஸ்மைல்’ என்ற என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மேற்கண்ட இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங் களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.