

சினை ஊசி போட பயிற்சி பெற்றவர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. மீறி போலி மருத்துவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதும், சிகிச்சை பெறுவதும் தவறான செயல் ஆகும்.
போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் என்று கூறி, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு.
செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது. அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதி உள்ளவர்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து தகவல் அறிந்தால், தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடமோ, அருகில் உள்ள காவல் நிலையத்திலோ தெரிவிக்கலாம். போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும். இதுகுறித்து போதிய விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.