

ரா.தாமோதரன், அரசுப் பள்ளி ஆசிரியர்:
பெற்றோருக்குக் கட்டண நெருக்கடியும், மாணவர்களுக்கு மன அழுத்தமும் தராத பள்ளி அரசுப் பள்ளி. தரமிக்க, ஐசிடி தனித்திறன் கொண்ட ஆசிரியர்களைக் கொண்டது அரசுப் பள்ளி. ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் எந்தக் கட்டணமும் இல்லாமல் 12-ம் வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்க முடியும். பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, சைக்கிள், லேப்டாப் உட்பட 14 வகையான விலையில்லாப் பொருட்களை மாணவர்கள் பெற முடியும். எல்லா அரசுப் பள்ளிகளிலும் கூடுதலாக மாணவர்கள் சேர வேண்டும் என்றால், தனியார் பள்ளிகளைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தங்களுடைய சிறப்பம்சங்கள் அடங்கிய பதாகையைப் பள்ளி முன்பு வைக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் இருக்கின்றன என்றாலும், அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. இதுபோன்ற குறைகளையும் அரசு போக்க வேண்டும்.