

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுசம்பவம் தொடர்பாக நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 28-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. 13 போலீஸார் சாட்சியம் அளித்தனர்.
தூத்துக்குடியில், 2018 மே 22-ம்தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு,தடியடி மற்றும் தொடர் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசுஅலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள்என மொத்தம் 719 பேரிடம், 27 கட்டங்களாக விசாரணை நடத்திவாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
ஆணையத்தின் 28-ம் கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை அரசினர் விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 102 போலீஸாருக்கு, விசாரணையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று,சம்மன் அனுப்பப்பட்டிருந்த 13 போலீஸாரும் சாட்சியம் அளித்தனர்.