சூளகிரி விவசாயி கொலை வழக்கில் மூவர் கைது: 4 பேர் நீதிமன்றத்தில் சரண் :

சூளகிரி விவசாயி கொலை வழக்கில் மூவர் கைது: 4 பேர் நீதிமன்றத்தில் சரண் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகப்பா என்கிற முருகன் (50). கடந்த 22-ம் தேதி விவசாய நிலத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பாக அவரது மனைவி ரெஜினம்மா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 23-ம் தேதி ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகே ராஜாபுரத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஓசூர் டிஎஸ்பி (பொ) சங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், உத்தனப்பள்ளி அருகே காரில் வந்த பெண் தொழிலதிபர், அவரது ஓட்டுநர் கொலை வழக்கில் விவசாயி முருகன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் இருந்தார். அப்போது, தேன்கனிக்கோட்டை வட்டம் குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்த அம்ரிஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருந்து 2 பேரும் வெளியே வந்தனர். பிணையில் வெளியே வந்த முருகனிடம் நிலம் விற்பனை செய்த தொகை ரூ.30 லட்சம் இருப்பதை அறிந்த அம்ரிஷ், தனது நண்பர்கள் 7 பேர் உதவியுடன் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிந்தது.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குந்துமாரனப்பள்ளி அம்ரிஷ் (26), ஓசூர் மூக்கண்டப்பள்ளி கொத்தூர் ஹரிஷ் (21), சப்படி முருகன் (21) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மேலும், இக்கொலையில் தொடர்புடைய நல்லகான கொத்தப்பள்ளி சதீஷ் (25), வெங்கடேசன் (26), கனாப்பட்டி (23), சப்படி நாகன் (23) ஆகிய 4 பேரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நேற்று சரண் அடைந்தனர். தலைமறைவாக உள்ள பெல்லட்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in